Skip to main content

“எதிர்க்கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை” - நிதிஷ்குமார் விமர்சனம்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Nitish Kumar crictized Opposition parties have never worked for the country

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய ஆதரித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பேசினார். அப்போது அவர், “பீகாரில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்க உள்ளீர்கள். ஆனால் இன்றே நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். நீங்கள் உறுதிமொழி எடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

எதிர்க்கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்குச் சேவை செய்ததில்லை. பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறும். அடுத்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த முறை அவர்கள் பெற்ற எந்த இடத்திலும் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இந்திரா காந்தி சிலையின் சர்ச்சைகளும் சென்டிமென்ட்களும்'- கேள்விகளை அடுக்கிய கராத்தே தியாகராஜன்  

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 'Indira Gandhi Statue Controversies and Sentiments' - Karate Thiagarajan Asks Questions

சென்னையில் இந்திரா காந்திக்கு சிலையை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்திருக்கும் நிலையில், இந்திரா காந்தி சிலை அமைப்பதில் சர்ச்சைகள் மற்றும் சென்டிமென்ட்கள் இருப்பதாக பாஜக நிர்வாகியான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக சட்டமன்றத்தில் 24 ஆம் தேதி செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன் சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் இதில் மகிழ்ந்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் எமர்ஜென்சியை இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நாள் ஜூன் 25. அந்த நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திமுக தான். அப்படி இருக்கும் நிலையில் இந்திரா காந்திக்கு திமுக அரசின் சார்பில் சிலையா/ என்று திமுகவினர் மனதில் எதிரொலிக்கிறது.

அதேபோல் இந்திராவின் எமர்ஜென்சியை நினைவுபடுத்துவதற்காகத் தான் அவருக்கு சிலை அமைக்கும் அறிவிப்பை ஜூன் 24ஆம் தேதி திமுக அரசு அறிவித்திருக்கிறதா என்று உணர்வுள்ள காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்திரா காந்தி சிலையை சுற்றி சர்ச்சைகளும், சென்டிமெண்டுகளும் சூழ்ந்து இருப்பது திமுக தலைமைக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

அகில இந்திய அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற தலைவராக இருந்த வழக்கறிஞர் ஏசைய்யா என்பவர் இந்திரா காந்திக்கு சென்னையில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் 1986 ஆம் ஆண்டு அனுமதி கோரி இருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு இந்திரா காந்திக்கு சிலை அமைக்க அனுமதி பெறுகிறார் ஏசைய்யா. அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்திற்கு சிலை வைக்க அனுமதி கிடைக்கிறது. சிலை அமைக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் முயற்சிகள் எப்போது தொடங்கியதோ அப்போதிலிருந்தே தேசிய அரசியலில் ஏறுமுகமாக இருந்த அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை இறங்கு முகமானது. தொடர் சரிவுகளை சந்தித்தார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் படிப்படியாக அரசியலில் இருந்து விலகவும் நேர்ந்தது. சிலை அமைக்கும் முயற்சிகளும் முறிந்தது.

இதன் பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி சந்தித்து இந்திரா காந்திக்கு சிலை அமைப்பது குறித்து விசாரித்தார் ஏசைய்யா. அப்போது அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் பெறப்பட்ட அனுமதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயருக்கு மாற்றி உத்தரவினை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக் கொடு என்று ஏசைய்யாவிடம் தெரிவித்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்படி அனுமதி மாற்றி பெறப்பட்டு அதனை வாழப்பாடியிடம் கொடுத்தார் ஏசைய்யா. சிலை அமைக்கும் முயற்சியை வாழப்பாடி எடுத்த மூன்றாவது நாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவருக்கு பறிபோனது. இருந்தாலும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்திரா சிலை குறித்த விஷயத்தை வாழப்பாடி ராமமூர்த்தி கொண்டு சென்ற போது இந்திராவுக்கு சிலை வேண்டாம் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்கலாம் என்று புதிய யோசனை சொன்னார் ஜெயலலிதா.

அதாவது 1991-ல் தேர்தலுக்கு முன்பு ராஜீவ் காந்தி கடைசியாக மாலை அணிவித்தது ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இந்திரா காந்தி சிலைக்கு தான். சென்டிமெண்டாக இது சரியில்லை என ஜெயலலிதாவுக்கு அப்போது சொல்லப்பட்டிருப்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்திராவுக்கு சிலை வேண்டாம் என வாழப்பாடியிடம் ஜெயலலிதா சொன்னதன் ரகசியம்.

இதையடுத்து இந்திரா காந்தியை கைவிட்டு விட்டு சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் ராஜீவ் காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ஜெயலலிதாவின் முன்னிலையில் ராஜீவ் காந்தி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரசிம்மராவ். இந்நிலையில் திமுக -தமாகா கூட்டணி 1996-ல் அமோக வெற்றி பெற்றது. தாமாக தலைவர் மூப்பனாரை சந்தித்து இந்திரா காந்தி சிலை அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார் ஏசைய்யா. இந்திரா மீது பற்றுதல் கொண்ட மூப்பனார் சிலை அமைக்கவும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். உடனே சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பில் சிலையும் அமையும் இடத்தை பார்வையிட்டார்/மேலும் புகழ்பெற்ற சிற்பி மணிநாகப்பாவிடம் சிலை வடிவமைக்கும் பணிகளை துவக்குமாறு அறிவுறுத்தியதுடன் முன்பணமாக மூன்று லட்சம் கொடுத்தார் மூப்பனார்.

சிலை அமைக்கும் பணி துவங்கியதுமே மூப்பனார் பிரச்சனைகளை சந்தித்தார். மறைந்தும் போனார். இந்திராவுக்கு சிலை அமைக்கும் பணி துவக்கத்திலேயே முற்றுப்பெற்றது ஏசைய்யாவும் இறந்து போனார். ஆக இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இப்படி இந்திராவுக்கு சிலை எடுக்க முயற்சித்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு சரிந்து போனதாக சிலையை சுற்றி சர்ச்சைகளும் செண்டிமெண்டுகளும் அப்போதே உலா வந்தன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீண்ட கால மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த செண்டிமெண்ட் விவகாரம் தெரியும்.

இந்த விவகாரம் எல்லாம் தெரிந்து தான் பெரியாரின் பேரன் என்று வர்ணிக்கப்படுகின்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உட்பட காங்கிரஸ் தலைவர் யாரும் இந்திராவுக்கு சிலை அமைக்க முயற்சி எடுத்ததே இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது இந்திராவுக்கு சிலை அமைக்கப்படும் என்று திமுக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. அதனை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வரவேற்கிறார்.

புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டு காங்கிரஸ் கட்சியில் தஞ்சமடைந்து தலைவராக வந்துவிட்ட செல்ல பெருந்தகைக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரியாமல் போகலாம். தெரிந்திருக்கவும் நியாயம் இல்லை. ஆனால் தமிழகம் பெரியார் மண் எனச் சொல்லும் திராவிட இயக்கத்தினருக்கும், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் இந்த சர்ச்சைகளும், சென்டிமென்ட்டும் நன்றாகவே தெரியும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திராகாந்தி சிலை அறிவிப்பை எப்படி திமுக அரசு அறிவித்தது என்று தெரியவில்லை. இந்த சென்டிமென்ட் விவகாரத்தை அறிவித்துள்ள திமுகவுக்கு நெருக்கமான காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ்,, கோபண்ணா போன்றோர் இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா? இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த யாரும் சத்தியமூர்த்தி பவனில் குறைந்தபட்சம் ஒரு மார்பளவில் கூட இந்திராவிற்கு சிலையை ஏன் அமைக்கவில்லை? மேலும் அமைச்சர் சாமிநாதனும் செல்லப்பெருந்தவையும் சிலை அமையும் அண்ணா சாலை பென்சில் பகுதி பார்வையிட்டு அதன் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
nn

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.