மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

mumbai star hotel mlas  Acceptance of pledge

இந்நிலையில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை என்.வி. ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வுவிசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உத்தரவு நாளை (26.11.2019) காலை 10:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.

இருப்பினும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து, தங்கள் கூட்டணிக்கு 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தை வழங்கிய தலைவர்கள், ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

Advertisment

mumbai star hotel mlas  Acceptance of pledge

அதன் தொடர்ச்சியாக மும்பை தனியார் ஹோட்டலில் 162 எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பு இன்று (25.11.2019) மாலை 07.00 மணிக்கு நடைபெறும் என்றும், இதை நேரில் வந்து காணுமாறு அம்மாநில ஆளுநருக்கு சிவசேனா கட்சி அழைப்பு விடுத்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஆதரவு 162 எம்.எல்.ஏக்களும், சரத்பவார், உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி தலைமையின் கீழ் கட்சிக்கு நேர்மையாக இருப்பேன் எனவும், பாஜகவுக்கு பயனளிக்கும் எதையும் செய்ய மாட்டேன் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்காலிக நிவாரணமாக ரூபாய் 5,380 கோடியை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஒதுக்கினார்.