Skip to main content

தலைமைச் செயலாளரைக் கண்டித்து எம்.எல்.ஏ முற்றுகை; அரசு விழாவில் அதிரடியாக நுழைந்ததால் பரபரப்பு

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

MLA blockade  Puducherry to condemn Chief Secretary for not implementing 'Smart City' project

 

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்வதில்லை, அதனால் திட்டங்கள் காலதாமதமாக நடப்பதாகவும் கூறி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியதுடன், மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து இருந்தார்.

 

இந்த நிலையில் நேற்று புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்பு எம்.எல்.ஏ நேரு தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு சென்ற கிழக்கு எஸ்.பி சுவாதி சிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்க மறுத்த நிலையில் தலைமைச் செயலரின் தனிச் செயலாளர் நேரில் வந்து போராட்டக் குழுவுடன் பேசினார். ஆனால் 'தலைமைச் செயலாளர் நேரில் வந்து ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஆய்வு தொடர்பாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்' எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். பேச்சுவார்த்தை நடத்த தனிச் செயலாளரிடம் போராட்டக் குழுவினர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரி உறுதிமொழி அளித்ததால் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்

 

அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற சுயேச்சை எம்.எல்.ஏ நேரு, தலைமைச் செயலாளர் அங்கு இல்லாததால் கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் பங்கேற்று இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார். எம்.எல்.ஏ வருவதை வாக்கி டாக்கி மூலம் உயர் அதிகாரிகள் பாதுகாப்பில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் விழா நடக்கும் அரங்கின் வாயில் கதவை போலீசார் இழுத்து பூட்டினர். அப்போது அங்கு சென்ற எம்.எல்.ஏ, தன்னை உள்ளே அனுமதிக்குமாறு போலீஸிடம் கூறினார். அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காததால் 8 அடி உயரம் உள்ள கேட்டின் மீது ஏறி எம்.எல்.ஏ நேரு உள்ளே குதித்தார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இதேபோன்று உள்ளே சென்றனர். உள்ளே சென்ற எம்.எல்.ஏ நிகழ்ச்சியின் மேடையில் இருந்த தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாடினார்.

 

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுத்த நிதியை கொண்டு நகரை சுத்தம் செய்யாமல் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் என்ன பயன்? ஊரெல்லாம் நாறிக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தவில்லை. தலைமைச் செயலாளர் தான் அதற்கு சேர்மன். உப்பனாறு எங்கே இருக்கிறது ஒரு முறையாவது வந்து பார்த்திருக்கிறீர்களா? சாக்கடை ஓரத்தில் சுகாதாரமின்றி வாழும் மக்களுக்கு சுவாச கோளாறு புற்றுநோய் ஏற்படுகிறது” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் எம்.எல்.ஏ மற்றும் அவர் ஆதரவாளர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் புதுச்சேரியில்  பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.