Skip to main content

மருத்துவக்கல்லூரி கட்டண உயர்வு சமூகத்தை பாதிக்கும்! - இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை..!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
Government-medical-college-students


புதுச்சேரி அரசு மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி இந்திய மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் அநியாயமாக 3 மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பபெறக்கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மாணவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதற்கு மாறாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டியுள்ளது. இப்போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கல்லூரி நிர்வாகம் சர்வாதிகார தொனியில் விடுதிகளில் கழிவறைகளை பூட்டியும், தொடர்ந்து போராடினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என அச்சுறுத்துவதும், போராடுவது தவறு என்பதுபோல் சித்தரித்து மாணவர்களின் வீட்டிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதை இந்திய மாணவர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு வன்மையாக கண்டிக்கிறது.

 

 

மேலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராடுவது தவறு என்பது போல் சித்தரிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே புதுச்சேரியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் எவ்வித சமூக கட்டுப்பாடும் இன்றி செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டண உயர்வை நியாயப்படுத்தினால் தனியார் கல்வி நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை நியாயப்படுத்துவதற்கே இட்டுச்செல்லும். ஆகவே புதுச்சேரி அரசு உயர்த்தப்பட்ட கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

இந்திய அளவில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கும் ஒரே அரசு மருத்துவக்கல்லூரி புதுச்சேரி கல்லூரி தான். மாணவர்களையும், பெற்றோர்களையும் கடுமையாக பாதிக்கக்கூடிய கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக - ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரல் எழுப்பிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோருகிறது. இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்