Skip to main content

"சிக்கல் ஏற்பட்டால் அரசியலை விட்டு விலகுவேன்" -பஞ்சாப் முதல்வருக்கு ஹரியானா முதல்வர் உறுதி...

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

manoharlal khattar reply to amrinder singh in farmers rally issue

 

 

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். 

 

மத்திய அரசு கொண்டுவந்து மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், பஞ்சாபிலிருந்து டெல்லி வரை செல்ல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணி ஹரியானா, பஞ்சாப்  மாநில எல்லையான ஷம்புவில் இன்று நடைபெற்றபோது, அங்கிருந்த விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், விவசாயிகள் பேரணி மேலும் முன்னேறாமல் இருக்கும் வகையில் அதனைக் கலைக்க முற்பட்ட காவல்துறையினர், எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். அதேநேரம் பேரணியைத் தடுப்பதற்காக பாஜக ஆளும் ஹரியானா மாநில எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இந்த செயலை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார். 

 

இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வருக்குத் தனது ட்விட்டர் பதிவின்  மூலம் பதிலளித்துள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். அதில், "கேப்டன் அமரீந்தர் சிங், நான் மீண்டும் சொல்கிறேன், குறைந்தபட்ச ஆதார விலையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் அரசியலை விட்டு விலகுவேன் - எனவே, அப்பாவி விவசாயிகளைத் தூண்டுவதை நிறுத்துங்கள். கடந்த 3 நாட்களாக நான் உங்களை அணுக முயல்கிறேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அணுக முடியாத நிலையில் இருக்க முடிவு செய்தீர்கள். இதுதான் விவசாயிகள் பிரச்சனையில் நீங்கள் காட்டும் பொறுப்பா..?" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பா.ஜ.க.வில் இருந்து குடும்பத்துடன் விலகிய முன்னாள் ஒன்றிய அமைச்சர்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Former Union Minister who left BJP with his family in haryana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இதற்கிடையில், பா.ஜ.க கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், அக்கட்சியின் மீது அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பா.ஜ.கவில் இணைவதும் என மாறி மாறி கட்சி மாறி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். இது பா.ஜ.க மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த பிரேந்தர் சிங், ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் இவர், உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா, 2021 மீதான கூட்டுக் குழு மற்றும் மனுக்களுக்கான குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். 

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங், பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ஜே.பி நட்டாவுக்கு அனுப்பியுள்ளேன். 2014-19ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏவாக இருந்த எனது மனைவி பிரேம் லதாவும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாளை காங்கிரசில் இணைவோம்” என்று கூறினார். 

காங்கிரஸுடன், 40 ஆண்டுகால நீடித்த உறவுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரேந்தர் சிங் பா.ஜ.கவில் சேர்ந்தார். கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று பிரந்தர் சிங்கின் மகன் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.