Skip to main content

“இஸ்கான் அளவுக்கு யாரும் மாடுகளை கறிக்கடைகளுக்கு அனுப்பவில்லை” - மேனகா காந்தி

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Maneka Gandhi says No one has sent cows to curry houses as much as ISKCON

 

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய பா.ஜ.க எம்.பி.யுமான மேனகா காந்தி, விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார். இவர், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனும் இஸ்கான் நிறுவனம், மாடுகளை இறைச்சிக்கு விற்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவர் பேசியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இந்த இஸ்கான் அமைப்பானது இந்தியாவை பொதுத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் நூற்றுக்கணக்கான கோவில்கள், பசு பராமரிப்பு கூடங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி. மேனகா காந்தி இஸ்கான் அமைப்பிற்கு எதிராக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனமாக இஸ்கான் நிறுவனம் இருக்கிறது. பசு மாடுகளை வளர்க்கும் கோசாலைகளை நடத்துவதன் மூலம் இந்த அமைப்பு, பரந்த நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்திடமிருந்து ஏராளமான பலன்களைப் பெற்று வருகிறது. 

 

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூரில் இஸ்கான் அமைப்பினர் நடத்தி வரும் பசுக் கூடத்திற்கு நான் ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு பால் தராத பசுமாடுகள், கன்றுக்குட்டிகள் என ஒன்றுமே இல்லை. அப்படியென்றால் அனைத்தையும் விற்று விட்டார்கள் என்றுதான் அர்த்தம். இஸ்கான் நிறுவனம், இறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்கிறது. சாலைகளில் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள். அதோடு பசுவின் பாலையே தங்களது வாழ்நாள் முழுவதும் நம்பி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் அளவுக்கு வேறு யாரும் மாடுகளை கறிக்கடைகளுக்கு அனுப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

மேனகா காந்தியின் குற்றச்சாட்டிற்கு இஸ்கான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள பல பகுதிகளில் பசு பாதுகாப்பில் இஸ்கான் அமைப்பு ஒரு முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட மாட்டுத் தொழுவங்களை இஸ்கான் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பசுக்கள் மற்றும் காளை மாடுகளும் பாதுகாப்போடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட, காயமடைந்த அல்லது வெட்டப்படுவதற்கு முன் காப்பாற்றப்பட்ட பல பசுக்கள் தான் தற்போது தமது மாட்டுத் தொழுவங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது” என்று இஸ்கான் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.