Skip to main content

‘2010க்கு பிறகு வழங்கப்பட்ட அனைத்து ஓ.பி.சி சான்றிதழ்கள் ரத்து’ - கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Kolkata court takes action on All OBC certificates issued after 2010 are cancelled

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, சட்டம் 2012ன் கீழ் வழங்கப்பட்ட (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அமர்வு முன்பு இன்று (22-05-24) விசாரணைக்கு வந்தது. 

அதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) சட்டம், 2012ன் கீழ், 42 பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பிரிவுகளில் பல பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, மார்ச் 5, 2010 முதல் மே 11, 2012 வரை 42 வகுப்புகளை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தும் மாநில அரசின் உத்தரவு சட்டவிரோதமானது. அதனால், அந்த உத்தரவையும், அத்தகைய வகைப்பாட்டைப் பரிந்துரைக்கும் வருங்கால விளைவுகளை கருத்தில் கொண்டு, 42 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுகின்றன’ என்று உத்தரவிட்டது. 

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சிறுபான்மையினரின் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை குறைக்க மாநில அரசு அனுமதிக்காது. வெற்றி பெற்ற பிறகு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இது மீண்டும் ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. இதைத்தான் இன்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நான் நீதிமன்றங்களை மதிக்கிறேன். 

ஆனால், ஓபிசி இடஒதுக்கீட்டில் இருந்து முஸ்லிம்களை விலக்கி வைக்க வேண்டும் என்ற தீர்ப்பை நான் ஏற்கவில்லை. ஓபிசி இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம். வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி மசோதாவை நாங்கள் தயாரித்து, அமைச்சரவையிலும், சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்டது. அதை முடக்க பாஜக சதி செய்கிறது. ஒரு நீதிபதி, ‘நான் ஆர்.எஸ்.எஸ்.காரன்’ என்று கூறுகிறார், மற்றொருவர் பாஜகவில் இணைகிறார். நீங்கள் எப்படி நீதிபதியாக இருந்து நீதிமன்றங்களைத் தலைமை தாங்க முடியும்?” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“போலீசாரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது” - மேற்குவங்க ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
West Bengal Governor's sensational allegation on police

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸுக்கும் இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இப்படிபட்ட பரபரப்பான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும், மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தான் பாதுகாப்பாக இல்லை என ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக நேற்று (20-06-24) கொல்கத்தாவில் ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தற்போதைய பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர்களால்  எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நான் நம்புகிறேன். ராஜ்பவனில் கொல்கத்தா காவல்துறையினரிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள் எனது நடமாட்டத்தையும், எனது அதிகாரிகள் பலரையும் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் செயல்கள் அரசாங்கத்தில் உள்ள அவர்களின் அரசியல் எஜமானர்களின் மறைமுக ஆதரவுடன் உள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினார். 

Next Story

65% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து; பாட்னா நீதிமன்றம் அதிரடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 Patna court in action on Repeal of bihar 65% Reservation Act

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார்.  பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்கள் அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமாரின் பரிந்துரைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 

இதையடுத்து பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் பீகார் மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரித்தது. 

பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்தும் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசிதழ் வெளியிடப்பட்டது. புதிய சட்டத்தின் படி, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு(ST) 2 சதவிதமும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு(SC) 20 சதவிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (EBC) 25 சதவிதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை(BC) 18 சதவிதமும், உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) 10 சதவிதம் என இடஒதுக்கீடு வரையறுக்கப்பட்டது. 

இந்த நிலையில், பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான 65 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.