Skip to main content

"அரசியல் இல்லை; இது சினிமா"- 'பீஸ்ட்' படம் குறித்து கே.ஜி.எஃப். ஹீரோ யஷ்!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

 

கடந்த 2018- ஆம் ஆண்டு, யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம், இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்திய சினிமா ரசிகர்களால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது படக்குழு. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

இந்த நிலையில், கே.ஜி.எஃப்.- 2 படம் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும், அதற்கான ட்ரெய்லர் இன்று (27/03/2022) மாலை 06.40 மணிக்கு வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

கே.ஜி.எஃப்.- 2 படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன், படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரானது 2 நிமிடங்கள் 56 வினாடிகளை கொண்டது. யூடியூப் பக்கத்தில் வெளியான தமிழ் மொழி ட்ரெய்லரை, சில மணி நேரத்திலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கை  20 லட்சத்தைக் கடந்துள்ளது. 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

இதனிடையே, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இன்று (27/03/2022) மாலை 06.00 மணிக்கு கே.ஜி.எஃப்.- 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் உங்கள் படமும் வெளியாகவுள்ளது, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? போட்டி எப்படி இருக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

KGFChapter2 Trailer Launch Event IN BANGALORE

அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் யஷ், "கே.ஜி.எஃப். Vs பீஸ்ட் என்று நினைக்கவில்லை; கே.ஜி.எஃப். அண்ட் பீஸ்ட் என்று நினைக்கிறேன். தேர்தலில் தான் ஒருவருக்கு ஒரு ஓட்டு இருக்கும். அதிக ஓட்டு யாருக்கு விழுகிறதோ அவர்கள் ஜெயிப்பார்கள். மற்றவர்கள் தோல்வி அடைவார்கள். இது அரசியல் கிடையாது; சினிமா. இதில் ஒருவருக்கு ஒரு ஓட்டு கிடையாது; இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும். விஜய் மீது எனக்கு மதிப்பு உள்ளது. நானும் விஜய் படம் பார்ப்பேன். எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூர் சம்பவம்; மண்ணடியில் என்.ஐ.ஏ. சோதனை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Bangalore Incident; NIA raids mannadi

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில், அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பான விசாரணையில் அது குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையைக் கையில் எடுத்துள்ள நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை தற்போது சோதனை நடத்தி வருகிறது. பெங்களூர் வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியிருந்ததாக முன்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், மண்ணடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ சோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.