Skip to main content

"நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தராகிவிடுங்கள்" - பினராயி விஜயனுக்கு காட்டமாக கடிதம் எழுதிய ஆளுநர்!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

kerala governor - pinarayi vijayan

 

மாநிலத்தின் ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பு வகித்துவரும் நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான், சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என காட்டமாக கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சில நியமனங்கள் தொடர்பான விவகாரங்களை தனது கடிதத்தில் பட்டியலிட்டுள்ள கேரள ஆளுநர், பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியாக நியமனங்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

 

சமீபகாலத்தில், பல்கலைக்கழகங்கள் தவறான காரணங்களுக்காக செய்திகளில் வந்துள்ளன. குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட பல்வேறு நியமனங்கள் தொடர்பாக செய்திகள் வந்துள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தராக நான் நிலைமையை வருத்தத்தோடு கவனித்துவந்தேன். ஆனால் சமீபத்திய சம்பவங்களும், விதிகள் மற்றும் நடைமுறைகளை முழுவதுமாக மீறி விஷயங்களைச் செய்ய எனக்கு அழுத்தம் கொடுக்கப்படும் விதமும் என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

 

பல்கலைக்கழகங்கள் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதும், கல்வியாளர் அல்லாதவர்கள் கல்வி சார்ந்த முடிவுகளை எடுப்பதும் தற்போதைய நிலையாக இருந்துவருகிறது. இந்தசூழ்நிலையில், பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்து, நீங்கள் தனிப்பட்ட முறையில் வேந்தர் பதவியை ஏற்றுகொள்ள வேண்டும். அதன்மூலம் உங்கள் அரசியல் நோக்கங்களை ஆளுநரைச் சார்ந்திருக்காமல் நிறைவேற்றலாம் என்பதே உங்களுக்கு எனது ஆலோசனை. பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபிறகு, அரசியல் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க வாய்ப்பில்லை.

 

சட்டசபை கூட்டத் தொடரில் தற்போது நடைபெறாத நிலையில், முதல்வர் (வேந்தர் பதவியை ஏற்க) அவசரச் சட்டத்தை தேர்வு செய்யலாம். நான் அதில் உடனடியாக கையெழுத்திடுவேன் என உறுதியளிக்கிறேன். இதற்கு மாற்றாக வேந்தரின் அதிகாரங்களை ஆளுநர், முதல்வருக்கு மாற்றக்கூடிய சட்டப்பூர்வ ஆவணத்தைத் தயாரிக்குமாறும் நீங்கள் அட்வகேட் ஜெனரலிடம் கூறலாம். இதற்கு சட்டப்பூர்வ வழியைக் கண்டுபிடிப்பது அட்வகேட் ஜெனரலுக்கு கடினமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். வேந்தரான என்னால் பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பது சாத்தியமற்றதாகிவிட்டதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.