Skip to main content

ரூ.3 கடனை திருப்பிச் செலுத்த விவசாயியை 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி... குவியும் கண்டனங்கள்...

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

karnataka farmer walks to pay 3 rs loan

 

மூன்று ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விவசாயி ஒருவரை சுமார் 15 கிலோமீட்டர் நடந்து வரவழைத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

 

கர்நாடக மாநிலம் பருவே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லஷ்மி நாராயணன், நித்தூரில் உள்ள தனியார் வங்கியில் ரூ 35 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றிருந்தார். இதில், ரூ. 32,000 அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 3,000 ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு அவர் வங்கியில் செலுத்தியிருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் லஷ்மி நாராயணனைத் தொடர்புகொண்ட வங்கி அதிகாரிகள், மீதமுள்ள கடன் தொகை குறித்துப் பேசுவதற்காக அவரை உடனே வங்கிக்கு வரச்சொல்லியுள்ளனர். ஏற்கனவே கடன் அனைத்தையும் செலுத்திவிட்டதால் குழப்பமடைந்த அவர், அதிகாரிகள் வற்புறுத்தலால் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், பொது முடக்கம் காரணமாகப் பேருந்து சேவை இல்லாததால், தனது வீட்டிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே வங்கிக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்று விசாரிக்கையில் அவர் செலுத்த வேண்டிய தொகை 3 ரூபாய் 46 பைசாவை உடனே செலுத்தவேண்டும் எனக் கேட்டு அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

 

இதுகுறித்து பேசியுள்ள அவர், "வங்கியிலிருந்து போன் செய்து உடனே வருமாறு கூறினார்கள். அதனால், அச்சமடைந்தேன். ஊரடங்கு காரணமாகப் பேருந்து சேவை எதுவும் இல்லை. என்னிடம் சைக்கிள் கூட இல்லை. எனவே நடந்தே வங்கிக்கு வந்தேன். இங்கு வந்து பார்த்ததும் நான் கட்ட வேண்டிய தொகை 3 ரூபாய், 46 பைசாக்கள் என்று தெரிவித்தார்கள். வங்கியின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் என்னைக் காயப்படுத்திவிட்டது" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வங்கி மேலாளர் பிங்வா பேசுகையில், "தணிக்கை நடந்து கொண்டிருந்ததால், அவரது கடன் கணக்கை முடிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் 3 ரூபாய், 46 பைசா பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், அவருடைய கையெழுத்தும் தேவைப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
New information about the Bengaluru incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல  வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.