'It's a completely false rumour'- Minister Veena George warns

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஆறாவது நாளாக இன்றும் (04.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது.

Advertisment

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது எனக் கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 365 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 205 பேரைக் காணவில்லை எனக் கேரளா அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 2000 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நிலச்சரிவு குறித்து தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான தவறான தகவல்கள் பரவி வருவதாக தெரிவித்துள்ளார். குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக வலம் வரும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற தவறான பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறான செய்தியை பரப்புபவர்களின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என வீணா சார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.