Skip to main content

தமிழ்த்தாய் வாழ்த்து... சோனியா காந்தியின் கடிதம்... ராகுல் நடைபயணம் துவக்க விழாவின் முக்கிய நிகழ்வுகள் 

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்துக்காக 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்கள் 3,570 கி.மீ தூரம் என நடந்தே செல்லும் ராகுல் காந்தி, நேற்று 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து பயணத்தை தொடங்கினார். முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுல் காந்தியின் கையில் கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தார். இதற்காக முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார்.

 

ராகுல் காந்தி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். பின்னர் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் முன்னாள் முதல்வர் கலைஞர் எழுப்பிய திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு பூம்புகார் படகு மூலம் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து காந்தி மண்டபத்துக்கு வந்த ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுடன் அங்கு 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு தியானம் செய்தார். அப்போது அங்கு தமிழில் இசையஞ்சலி மூலம் காந்தியின் நினைவுகள் கூறப்பட்டது.

 

பின்னர் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த தேசியக் கொடியை பிடித்தபடி ராகுல் காந்தி 600 மீட்டர் தூரம் நடந்து காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் எழுந்து நின்று உற்சாக குரல் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் வந்தேமாதரம் ஆகியவை பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் இந்திய ஒற்றுமை பயணத்தை வாழ்த்தி சோனியா காந்தி கொடுத்த கடிதம் வாசிக்கப்பட்டது.

 

தொடர்ந்து கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கா் முதல்வா், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவா் செல்வ பெருந்தகை, ப.சிதம்பரம், பாராளுமன்ற காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுனா கார்கே, வேணு கோபால் ஆகியோர் பேசினார்கள். 

 

பின்னா் ராகுல் காந்தி பேசும் போது, “தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் போதெல்லாம் மனநிறைவுடன் செல்கிறேன். சிலர் நமது தேசியக் கொடியையும் அதன் மூவா்ணத்தையும் சக்கரத்தையும் பார்த்து இது ஒரு சாதாரண துணி என நினைக்கிறார்கள். இது வெறுமனே சக்கரமும் துணியும் அல்ல அதை விட மேலானது. இந்த கொடி நம் கைக்கு சாதாரணமாக வரவில்லை நன்கொடையாகவும் கிடைக்கவில்லை இது இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்ட கொடி. அப்படிபட்ட தேசிய கொடியை பா.ஜ.க.வும், ஆா்.எஸ்.எஸ்.ஸும் மிகப்பெரிய தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கியிருக்கிறார்கள். 

 

தேசியக் கொடி ஒரு மாநிலத்துக்கும், ஒரு மொழிக்கும் சொந்தமானது அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரதிநிதித்துவம் படுத்துவது தான் தேசியக் கொடி. இதனால் தற்போது தேசத்தை ஒற்றுமைபடுத்த அவசியம் ஏற்பட்டுள்ளது. பாஜக மதத்தின் மூலமாகவும் மொழியின் மூலமாகவும் நாட்டை பிளக்க நினைக்கிறது. சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து எதிர் கட்சியினரை மிரட்டி வருகிறது” என்றார். ராகுல் காந்தியின் ஆங்கில உரையை பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயா்த்து தமிழில் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.