Skip to main content

குஜராத் தேர்தல்; ஓட்டு போடுவதற்காக திருமணத்தை ஒத்தி வைத்த மணமகன்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

groom who postponed the wedding to vote gujarat assembly election

 

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே இருந்து வந்தது. இம்முறை ஆம் ஆத்மி களத்திற்கு வரவும் மும்முனைப் போட்டியாகத் தேர்தல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்த வாக்குப் பதிவில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

 

இதில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறின. காலையில் 100 வயதுடைய பாட்டி ஒருவர் வாக்குச்சாவடி ஒன்றில் முதல் ஆளாக வாக்களித்திருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே போன்று மற்றொரு வாக்குச்சாவடியில் திருமணமான ஜோடி ஒன்று மணக்கோலத்தோடு தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

 

இந்த நிலையில் பிரவுல்பாய் மோரே என்ற இளைஞருக்கு மஹாராஷ்ராவில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காலையில் நடக்க வேண்டிய திருமணத்தை மாலை நேரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு குஜராத்தில், தபு நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருமண உடையான குர்தா மற்றும் பைஜாமா அணிந்து வந்து வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  மறக்காமல் அனைவரும் கண்டிப்பாக வாக்கு செலுத்துங்கள் எனக் கூறிவிட்டு திருமணத்திற்காக மகாராஷ்டிரா புறப்பட்டுச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்