Skip to main content

அமைச்சர் பேசும்போது குறுக்கிட்டு பேசிய ஆளுநர் தமிழிசை

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Governor Tamilisai interrupted the minister's speech

 

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் 'பிர்சா முண்டா' பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கௌரவ தின விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர.பிரியங்கா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், “சில தினங்களுக்கு முன்பு ராணுவ வீரர் ஒருவர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் 'தேச நலனுக்காக நாங்கள் எல்லையில் நாட்டை காப்பாற்ற துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஊருக்குள் பிரிவினை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று ஒரு இயக்கத்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார். இதனை எதிர்த்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ராணுவ வீரரின் குடும்பத்திடம் சென்று அவரின் குடும்பத்தாரை மிரட்டி துன்புறுத்தியுள்ளனர். இது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ராணுவ வீரர்கள் எந்த விதத்திலும் விமர்சிக்கப்படக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்ட விதிகளிலேயே இருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் தேசப்பற்றை குலைப்பதாகவும், போராடுகின்ற வீரர்களை நிந்திப்பதாகவும் இருக்கிறது.

 

Governor Tamilisai interrupted the minister's speech

 

காசிக்கு சென்று தமிழ் பாடலை பாடிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த மகளாக இருந்தாலும், புதுச்சேரியின் சகோதரி என்பதை அங்கே நிலைநிறுத்தி விட்டு வந்துள்ளேன். அதுமட்டுமின்றி புதுச்சேரிக்காக தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன். முதலமைச்சருக்கும் எனக்கும் இடையேயான உறவில் எந்தவித விரிசலும் இல்லை. பாசப்பிணைப்பு தான் இருக்கிறது" எனக் கூறினார். 

 

மேலும் அவரிடம்,  "தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கனிமொழி விமர்சித்திருப்பது" குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஆளுநர்களை பற்றி இப்படி கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் சாதாரண மனிதர்கள் போலவும், மரியாதை கொடுக்க வேண்டாதவர்கள் என்பதை போலவும் எண்ணம் இப்போது இருக்கிறது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. அவர்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் ஆளுநர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தகுதியின் அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள். வாரிசு அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம், "ஆதிதிராவிடர் நலத்துறையை பொறுத்தவரையில் அரசு அனைவருக்கும் இலவச கல்வி தர முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி தடைக்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. வெகுவிரைவில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும்" என்றார். அப்போது ஆளுநர் தமிழிசை, "ஆன்லைன் ரம்மி தடை மட்டுமல்ல. புதுச்சேரி மாநில மக்களுக்கான எந்தத் திட்டமாக இருந்தாலும் நான் ஒப்புதல் தருகிறேன். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று குறுக்கிட்டுக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சினிமா வசனத்தில் பதிலளித்த தமிழிசை

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Tamilisai replied in the movie dialogue 'I'm back and tell you'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.

Next Story

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition candidates shared congratulations

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.

இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Opposition candidates shared congratulations

இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

Opposition candidates shared congratulations

மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.