Skip to main content

புலம்பெயர்வில் இறந்தவர்கள் விவரம் அரசிடம் இல்லை!!! கைவிரித்த மத்திய அரசு...

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

The government does not have the details of those who died in the diaspora

 

 

உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட கரோனா, இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைத்து நாளொரு மேனியும் பொழுதொரு எண்ணிக்கையுமாக பெருகிவருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கியதையடுத்து, கரோனா கால புலம்பெயர்வுகள், மரணங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

 

அப்போது மாநிலவாரியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையைத் தெரிவித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், “உத்தரப்பிரதேசத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து 32 லட்சம்பேர் திரும்பியுள்ளனர். பீகாருக்கு 15 லட்சம் பேரும், ஒட்டுமொத்தமாக 1 கோடியே நான்கு லட்சம் பேரும் கரோனா காரணமாக தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்” என தெரிவித்தார். 

 

கேரளா மற்றும் தமிழகத்தில்தான் கரோனா காரணமாக குறைந்த அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். தமிழகத்துக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,050 ஆகும். அதேசமயம் கரோனா ஊரடங்கில் புலம்பெயர்ந்தபோது இறந்தவர்களின் விவரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது மத்திய அரசு இதுகுறித்து தன்னிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லையென மறுத்துள்ளது. அதனால் யாருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளது. ரயிலிலும், சாலையிலும், கால்நடையாகவும் புலம்பெயர்ந்தபோது விபத்திலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 198 என சேவ் லைஃப் பவுண்டேஷன் அமைப்பு மே 31-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

 

இத்தகைய கொடூர தொற்று நிலவும் காலகட்டத்தில் இடம்பெயரும் தொழிலாளர்களை தேசமே கண்கொண்டு பார்த்த நிலையில் அதுகுறித்து உரிய தரவுகள் இல்லையென மத்திய அரசு கூறுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

“ஒரு தனியார் அமைப்பு இத்தனை சீரியஸாக இறந்தவர்களின் எண்ணிக்கையை அக்கறையுடன் கணக்கிடமுடியும்போது, அரசாங்கம் இன்னும் எளிதாகவும் துல்லியமாகவும் இந்த கணக்குகளை பதிவிடமுடியும். நம் அரசாங்கம் இத்தகைய தரவுகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்” என சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.