GN Saibaba donation for medical research

மனித உரிமை ஆர்வலரும், டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான ஜி.என். சாய்பாபா (வயது 54) மாவோயிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக 2017ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் இவரை மும்பை உயர் நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இத்தகைய சூழலில் தான் இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஜி.என். சாய்பாபா இன்று (13.10.2024) காலமானார். இதனையடுத்து அவரது விருப்பப்படி ஏற்கனவே கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானமாக வழங்கப்பட உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும்.

GN Saibaba donation for medical research

Advertisment

தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர். பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.