Skip to main content

எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

gas cylinder price hiked

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரியில் திடீரென்று இரண்டாவது முறையாக 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

 

இந்த புதிய விலை உயர்வு, முதல்கட்டமாக டெல்லி மெட்ரோ நகரத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் டெல்லியில் எல்பிஜி சிலிண்டர் விலை 769 ரூபாயாக அதிகரித்துள்ளது. புதிய விலை, திங்கள் கிழமை (பிப். 15) பகல் 12.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. இப்போதுள்ள நிலையில், விரைவில் இந்தியா முழுவதும் எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்நாட்டு உற்பத்தி திறன், சந்தை தேவை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு எல்பிஜி காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

 

நடப்பு பிப்ரவரியில் கடந்த 4- ஆம் தேதி, சமையல் காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது திடீரென்று மீண்டும் 50 ரூபாய் விலை உயர்த்தி இருப்பது நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

புதிய விலைக்கு சிலிண்டர் வாங்கினாலும் அதில் கணிசமான தொகை மானியமாக நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், ஆண்டுக்கு 12 சிலிண்டர் வரை மானியத்துடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்தியன் ஆயில் அதிகாரிகள் கூறினர். அதேநேரம், வர்த்தக நோக்கிலான காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

 

வரும் காலங்களில் எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என கடந்த 4- ஆம் தேதியே எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக சிலிண்டர் விலை குறைப்பு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Commercial cylinder price reduction

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக ரூ. 36 அதிகரித்திருந்த நிலையில் இன்று (01.04.2024) ரூ.30.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் 1,960.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று முதல் 1,930 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

முன்னதாக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்த பிரதமர் மோடி சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின் குறிப்பாகப் பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'இது பிரதமர் தாய்மார்களுக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு' - தமிழிசை கருத்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
'This is the greatest gift the Prime Minister has given to mothers' - Tamil comments

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணத்திற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

nn

இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '''வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உஜ்வாலா என்ற இலவச கேஸ் இணைப்பு திட்டத்தை கொடுக்கும் பொழுது பிரதமர் மோடி சொன்னார் 'எனது தாய் கரி அடுப்பில் ஊதி ஊதி சமைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த புகையை தாய்மார்கள் உள்ளே இழுக்கும்போது ஏறக்குறைய 300 சிகரெட் புகைத்தால் நுரையீரலுக்கு எவ்வளவு கெடுதல் வருமோ அதே கெடுதல் இந்த புகை அடுப்பில் வருகிறது என்பதை கேள்விப்பட்டு தான் இந்த இலவச கேஸ் அடுப்பை கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதேபோல தான் இன்று விலை அதிகமாக இருப்பதால் பல குடும்பங்களுக்கு இது பிரச்சனையாக இருக்கிறது என்பதனால் ஒட்டு மொத்தமாக 100 ரூபாய் குறைந்திருப்பது என்பது உண்மையிலேயே மகளிர் தினத்தில் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பிரதமர் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் நான் நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.