![gang tied rope friend and dragged him road for not paying money](http://image.nakkheeran.in/cdn/farfuture/XMf6w33fkpvbgKlSWlyPu-tNtM8kTKFvOPLEbO-Akqk/1666185188/sites/default/files/inline-images/100_57.jpg)
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜெகநாத் பெஹ்ரா(22). இவரின் தாத்தா கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்ததாக கூறப்படுகிறது. தாத்தாவின் இறுதிச் சடங்கை நல்ல முறையில் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் இவருடைய நண்பர்களிடம் 1500 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன் மூலம் ஜெகநாத், தாத்தாவின் உடலை நல்லடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு வந்துள்ளனர். ஆனால், ஜெகநாத்தின் நிலைமை வறுமையிலிருந்ததால், ஒரு மாத காலம் ஆகியும் அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள், ஜெகநாத்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதன் பிறகு, ஜெகநாத்தின் கைகளை கயிற்றால் கட்டி கயிற்றின் மறுமுனையை பைக்கின் பின்புறம் கட்டி விட்டு ஓட விட்டுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை 30 நிமிடங்களுக்கு மேலாக நடுரோட்டில் ஓடி வந்த ஜெகநாத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பைக்கை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இச்செயலில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் கைது செய்ததோடு, அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.