Skip to main content

ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

g 20 representative meeting held in puducherry 

 

ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால் ஜி20 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இந்தியா முழுவதும் 200 நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடைபெறுகிறது. அதன்படி புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நேற்று தொடங்கியது.

 

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல்20 மாநாடு புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் அரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அஷிதோஷ் சர்மா தலைமை தாங்கினார். இந்திய அறிவியல் கழக இயக்குனர் ரங்கராஜன் வரவேற்றார். இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

மாநாட்டில் மாற்று எரிசக்தி, உலகளாவிய சுகாதார வசதிகள், அறிவியலுடன் சமுதாயம் கலாச்சாரத்தை இணைப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவில் ஜி20 மாநாட்டில் 'அறிவியல் 20' தலைமை பொறுப்பு அதிகாரி அசுதோஷ் ஷர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அறிவியல் அனைவருக்குமானது. அறிவியலில் இருந்து யாரும் ஒதுங்க வேண்டியதில்லை. ஜி20 இல் அறிவியல் 20 என்பது உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு ஆற்றல் சமபங்கு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு போன்ற உலகளாவிய பிரச்சனைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்குவதற்கும், அறிவியலை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்குமான ஒரு தளமாகும். அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் புதுமையான நடைமுறைகள் மூலம் மட்டுமே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க புதுமையான சிந்தனைகள் உருவாக வேண்டும். எங்கள் ஈடுபாடுகள் கொள்கை கட்டமைப்புகளுடன் வெளிவர வேண்டும். ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றலாம். அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டியது மிக அவசியம்.

 

மேலும் அறிவியல் 20 என்பது நிலையான வளர்ச்சிக்கான ஜி20 நாடுகளின் முன் முயற்சியே ஆகும். உறுப்பு நாடுகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அறிவியல் உலகில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து அறிக்கை வெளியிடுவோம். மொத்தம் 5 கூட்டங்கள் நிறைவுக்கு பிறகு, ஜூலை மாதத்திற்குப் பிறகு நாடுகளுக்கு பொருத்தமான சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கான கொள்கை வகுப்பாளர்களுக்கு எஸ்20 குழு தனது அறிக்கையை வெளியிடும்"  என்று குறிப்பிட்டார்.

 

மாநாட்டிற்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் தங்கி உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னை தேசிய பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த 20 வீரர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள உயர்ந்த கட்டிடங்களின் மீது இருந்து அதிநவீன தொலைநோக்கி மற்றும் துல்லியமாக சுடும் அதி நவீன துப்பாக்கி, வயர்லெஸ் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.