Skip to main content

பலனளிக்காத ஜந்தர் மந்தர்; கங்கையில் கண்ணீருடன் மல்யுத்த வீரர்கள்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

nn

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். 

 

ஓரிரு தினங்கள் முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

 

மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது. டெல்லியின் முக்கியமான பகுதியான ஜந்தர் மந்தரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மல்யுத்த வீரர்கள் பேரணியாகச் சென்றது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் வேறு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதனிடையே முன்பை விட டெல்லி ஜந்தர் மந்தரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து  மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்துள்ளார்கள். மேலும், டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

 

இந்நிலையில் அறிவிப்பின்படி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் ஒன்றாகக் கூடியுள்ளனர். மனதில் வலிகளை சுமந்து கொண்டு இந்தியாவிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 'எங்களுக்கு எதற்காக இந்த பதக்கங்கள்; இவற்றை நாங்கள் கங்கை தண்ணீரில் விட்டு விடுகிறோம். தேசத்திற்காக பதக்கங்களை சேர்த்து புகழ் சேர்த்ததைவிட வேறென்ன செய்தோம்' என கண்ணீர் வடித்தபடி காத்திருக்கும் வீரர்களை சக வீராங்கனைகள், வீரர்கள் தோளைத் தட்டி தேற்றி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.