Skip to main content

“இது முறையீடு இல்லை, எச்சரிக்கை” - பிரஜ்வல் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Former Prime Minister ldevegowda speech on Prajwal issue

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தத் தருணத்தில் என்னால் ஒன்றுதான் செய்ய முடியும். நான் பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, எங்கிருந்தோ திரும்பி வந்து போலீசில் சரணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்குச் செவிசாய்க்காவிட்டால், எனது கோபத்தையும், அவரது குடும்பத்தினர் அனைவரின் கோபத்தையும் அவர் சந்திக்க நேரிடும்.

அவருக்கு எதிரான விசாரணையில் என்னிடமிருந்தோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தோ எந்தவிதமான தலையீடும் இருக்காது என்பதை உறுதிசெய்வேன் என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆனால் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது அவர் மொத்தமாகத் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும். என் மீது அவருக்கு மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாலியல் தொந்தரவு; பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Brajwal Revanna suraj revanna brother arrested

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கித்தருவது தொடர்பாக அவரை அணுகிய போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஊழியர் அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வல் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரது தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரஜ் ரேவண்ணாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, 342, 506 இன் கீழ் ஹோலேநரசிபுரா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணா கடந்த 16 ஆம் தேதி (16.06.2024) ஹாசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகடா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்தாரர் கூறியுள்ளார். இந்த கைது சம்பவம் தொடர்பாக ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முகமது சுஜிதா கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும். எச்.டி ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்" என தெரிவித்துள்ளார். 

Next Story

கிரிவலம் முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய கர்நாடக பக்தர்கள் உயிரிழப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
devotees who returned to town after completing Girivalam lost their lives

திருவண்ணாமலை அணைக்கரை ரிங் ரோடு அருகில் கர்நாடகா பதிவெண்  கொண்ட காரில் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு பெங்களூர் நோக்கி சென்றனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையத்திலிருந்து கீழ்நாத்தூர் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் திருவண்ணாமலை நகருக்குள் சென்றனர். 

அணைக்கரை ரிங் ரோடு அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே, முருகன் வயது 36 தந்தை பெயர் ராஜமாணிக்கம், சே அகரம் செங்கம் தாலுக்கா, விஜயகாந்த் வயது 32 தந்தை பெயர் நாராயணன் கீழாத்தூர் ஆகிய இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

விபத்து நடந்தது நேற்று இரவு பௌர்ணமி கிரிவலம் என்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரத்துக்குள் வரும் 9 சாலைகளும் பெரும் சிரமத்தை சந்தித்தனர். விபத்தால் புறவழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதற்குள் இருவரும் இறந்துவிட்டனர். இறந்த உடல்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். விபத்து நடந்த உடன் காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடியிருந்தார். விபத்து நடத்திய காரின் ஓட்டுநர் யார்? அவர் எங்கே சென்றார் என்ற கோணத்தில் காவல் துறையினர் தேடி வருகின்றார்கள். காரின் உரிமையாளரை வரவைத்து விசாரணை நடத்துகின்றனர்.