Skip to main content

தொலைந்து போன மகனை 17 ஆண்டுகளாக தேடிய தந்தை... இறுதிவரை முகம் பார்க்காமல் இறந்த சோகம்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

The father who searched for his lost son for 17 years ...kerala incident

 

17 ஆண்டுகாலமாக காணாமல்போன மகனை தேடிவந்த தந்தை கடைசிவரை குழந்தையின் முகத்தைப் பார்க்காமலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சிபிஐ போலீசார் விசாரித்தும் கூட காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.

 

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மினி. இவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருந்தான். மகன் மீது பேரன்பு வைத்திருந்த பெற்றோர் 'ராகுல் நிவாஸ்' என்ற பெயரில் வீட்டையும் கட்டியிருந்தனர். ராஜு குவைத் நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி வீட்டுக்கு அருகே இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் காணாமல் போனார். இந்த தகவலை கேள்விப்பட்ட ராஜு அடுத்தநாளே இந்தியாவிற்குத் திரும்பி, இதுதொடர்பாக மகனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என போலீஸில் புகார் அளித்தார். ஒருபக்கம் பெற்றோர் தரப்பிலும் குழந்தை தேடப்பட்டது.

 

கேரள போலீசார், கேரள புலனாய்வுத்துறை என அனைத்து தரப்பிலும் காணாமல்போன குழந்தை தேடப்பட்ட நிலையில், கடைசியில் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் காணாமல்போன ராகுலை தேடி வந்தனர். ராகுல் காணாமல் போன பிறகு இவர்களுக்கு சிவானி என்ற பெண் குழந்தையும் பிறந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கை சிபிஐ முடித்துக் கொண்டது. இதற்கான அறிக்கையை கொச்சி நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்தது. சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. கேரள வரலாற்றில் இந்த வழக்கு மிகவும் மர்மம் நிறைந்த வழக்காக தற்பொழுத வரை இருக்கிறது. மகன் காணாமல் போனது தந்தை ராஜுவின் மனநிலையைச் சேதப்படுத்திய நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ராஜு மீண்டும் குவைத்துக்கு வேலைக்குச் சென்று உடல்நலம் சரியில்லாமல் மீண்டும் தாய்நாடு திரும்பினார். இந்தநிலையில் 17 ஆண்டுகளாக காணாமல்போன தனது மகனின் முகத்தை பார்க்க முடியாமல் தவித்து வந்த ராஜு, கடந்த 22ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல வினோத வழக்குகளைச் சந்தித்துவரும்  கேரள மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது இந்த செய்தி.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.