Skip to main content

“டாக்டர் எனக்கு மூளையில கேன்சர்.. அப்பா, அம்மாகிட்ட சொல்லாதீங்க” - 6 வயது சிறுவனின் கோரிக்கை

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

 

தனக்கு புற்றுநோய் இருப்பதை தன் பெற்றோரிடம் கூற வேண்டாம் என 6 வயது சிறுவன் மருத்துவரிடம் கூறியது குறித்த ட்விட்டர் பதிவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “8 மாதங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்களது ஆறு வயது மகனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் மூளை  நரம்பில் புற்றுநோய் இருந்ததைக் கண்டறிந்தனர்.

 

இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் மூளையில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதே சமயம், அந்த அறுவை சிகிச்சை ஆபத்தானதும் கூட. அடுத்த சில தினங்களில் மூளையில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டனர். அறுவை சிகிச்சையின்போது சில மூளை நரம்புகள் துண்டிக்கப்பட்டதால் சிறுவனுக்கு பக்கவிளைவாக வலிப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூளை நரம்பியல் வல்லுநரான என்னிடம் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தனர்.

 

இதற்காக சிறுவனின் பெற்றோர் முதலில் என்னைச் சந்தித்தனர். அப்போது சிறுவனிடம் புற்றுநோய் பற்றிய தகவல்களைக் கூற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாகவே கூறுங்கள் எனக் கோரிக்கையும் விடுத்தனர். இதற்கு ஒப்புக்கொண்ட பின் சிறுவன் என்னைத் தனியாகச் சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினர்.

 

சிறுவனை நான் தனியாகப் பார்த்தபொழுது, மற்ற நோயாளிகளைப் போல் இல்லாமல் அவன் முகத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. சிறுவன் என்னிடம் டாக்டர் எனக்கு கேன்சர் இருக்கிறது. அது நான்காம் நிலையைத் தாண்டிவிட்டது என்பதும் எனக்கு தெரியும். இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே நான் உயிரோடு இருப்பேன். இந்த விஷயத்தை என் பெற்றோரிடம் கூறாதீர்கள். இது அவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் உடைந்து விடுவார்கள். அளவுக்கு அதிகமாக அவர்கள் என்னை விரும்புகிறார்கள் என்று கூறினான். இதைக் கேட்டு நான் கண்கலங்கி விட்டேன். இதனைப் பற்றி அவனின் பெற்றோரிடம் கூறிய பொழுது அவர்களும் அழுதனர். எட்டு மாதங்கள் கழித்து சிறுவனின் பெற்றோர் என்னை மீண்டும் சந்தித்தனர்.

 

நான் சிறுவனைப் பற்றி விசாரித்தேன். அதற்கு அவர்கள், ‘டிஸ்னி வேர்ல்டுக்கு செல்ல வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். நாங்கள் எங்களது வேலையில் இருந்து தற்காலிகமாக விலகி அவனை அழைத்துச் சென்றோம். கடந்த மாதம் அவன் எங்களை விட்டு பிரிந்துவிட்டான். ஆனால் 6 மாதங்கள் நாங்கள் அவனுடன் சந்தோசமாக இருந்தோம். அவனுடன் நாங்கள் செலவிட்ட நாட்கள் என்றென்றும் எங்கள் நினைவில் இருக்கும்’ என்று கூறினர்.” என  இது குறித்து நீண்ட பதிவினை வெளியிட்டிருந்தார். இணையத்தில் தற்போது அது வேகமாகப் பரவி வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.