/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_153.jpg)
வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும்கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து பீகாரைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தமிழகத்தில் வடமாநிலத்தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத்தெரிவித்தது.
தொடர்ந்து சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தமிழகத்தில் காக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே தமிழகத்தில் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறிபதிவிட்டது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹைதராபாத்தில் இரு நபர்களிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த மோதலாகச் சித்தரித்து இவர் வதந்தி பரப்பியுள்ளார். இவர் பரப்பிய வதந்தி அடுத்தடுத்து பரப்பப்பட்ட வதந்திகளுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, பிரசாந்த் உம்ராவ்வை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.
இந்த நிலையில் பிரசாந்த் உம்ராவ் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, வதந்தி பரப்புவது நாட்டையே பிளவுபடுத்தும் என்றும், வதந்தி பரப்பியதற்காக பிரசாந்த் உம்ராவ் இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை எனவும்தமிழக போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இது அனைத்தையும் கேட்ட நீதிமன்றம்மனுதாரர் முன்ஜாமீன் கேட்டுதமிழக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)