Skip to main content

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 30/07/2020 | Edited on 31/07/2020

 

puducherry corona rate

 

புதுச்சேரி மாநிலத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"அகில இந்திய அளவில் கரோனா இறப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக இருக்கிறது. அப்படி இருந்தாலும் கூட மாநிலத்தில் இறப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், கரோனா பாதித்தவர்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்லவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று (29.07.2020) மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் இரவு நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும், உடற்பயிற்சி கூடங்களைத் திறக்கவும், திரையரங்குகள், கலையரங்குகள், ஓட்டல்களில் உள்ள பார்களை மூடவும் உத்தரவிட்டுள்ளனர். அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாக்களை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் கரோனா பாதிப்பு 6 ஆயிரம் வரை உயரும் என்றும், மிகப்பெரிய அளவில் பாதிப்பவர்கள் 2,600 பேர் வரை இருக்கும் என்றும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். ஆகவே அதற்கு சுகாதாரத்துறை ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவையான உபகரணங்கள், மருந்துகள் வாங்கவும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், ஏ.எம்.என்.கள், சுகாதாரத்துறை பணியாளர்களை நியமிக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய புதுச்சேரி மருத்துவத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

puducherry corona rate


காலியிடங்களில் பணியாளர்கள் வெகு விரைவில் பணியமர்த்தப்படுவர். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவினால் அதனைத் தடுத்து நிறுத்த மருத்துவத்துறை மட்டுமின்றி மற்ற துறைகளும் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசின் சார்பில் செய்து கொண்டிருக்கிறோம்.

தேவையான உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு அவைகள் வாங்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டர்கள், மானிட்டர்கள், கவச உடைகள், முகக்கவசங்கள், தேவையான மருந்துகள் வாங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சார்பில் இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. மத்திய அரசில் இருந்து வெண்டிலேட்டர்கள், முழு கவச உடைகள் வந்துள்ளன. ஆனால் மற்ற உபகரணங்கள் கொடுக்க காலதாமதமாகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும். அந்த நிதியுதவி கிடைக்கவில்லை. குறித்த காலத்தில் கிடைத்தால்தான் தேவையான உபகரணங்களை வாங்கவும், மருத்துவர்களை நியமிப்பதற்கான வேலையையும் செய்ய முடியும். இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம். முதல்வரின் கரோனா  நிவாரண நிதியலிருந்து ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 கோடி 20 லட்சம் ஒதுக்கி அந்தக் கருவிகள் வாங்கப்படுகின்றன.

 

puducherry corona rate


இப்படி மாநில அரசின் நிதி மற்றும் முதல்வரின் கரோனா நிவாரண நிதிகளில் இருந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முதல் கட்டமாக ரூ.225 கோடியையும், மொத்தமாக புதுச்சேரி மாநிலத்தைக் கரோனா இல்லாத மாநிலமாக மாற்ற தேவைப்படும் நிதி ரூ.975 கோடியையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு அது சம்மந்தமான எந்தவிதமான பதிலையும் மாநில அரசுக்கு இதுவரை கொடுக்கவில்லை.


இந்தச் சூழ்நிலையில் ஒருபுறம் மத்திய அரசின் விதிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். மற்றொருபுறம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தச் சோதனையான காலக்கட்டத்தில் புதுச்சேரி மாநில மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற முறையில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு, பக்கத்து மாநிலமான தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதையும் கருத்தில் கொண்டு, நம்முடைய மாநில அரசின் சார்பில் நாம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நாளை அறிவிப்பை வெளியிடுவோம்.

 

http://onelink.to/nknapp


புதுச்சேரி மாநில மக்களின் உயிர் முக்கியம். அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. நிதி ஆதாரத்தை ஒருபுறம் பெருக்க வேண்டும். மற்றொரு புறம் மக்களுக்கு மாநில அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நாளை அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிப்போம். கரோனாவுக்கு மருந்து எப்போது கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. பக்கத்து மாநிலமான தமிழகத்தில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. நம்முடைய மாநிலத்தில் அதனைக் கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கரோனா பாதித்தவர்களின் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற முடிவை இப்போது எடுத்துள்ளோம். யார் வீட்டில் கரோனா உள்ளதோ அவர்களின் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படும்.

இதனால் மக்களின் சகஜ வாழ்கை பாதிக்காது. இதையெல்லாம் புதுச்சேரி மாநில மக்கள் உணர்ந்துகொண்டு முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை உறுதியோடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் கரோனாவை புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாகக் குறைக்க முடியும்’’ என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.