Skip to main content

அடுத்தடுத்து நடக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; அதிரும் ஜார்க்கண்ட்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Consecutive incidents of misbehaviours in jharkhand

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி, சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளனர். அந்த சுற்றுலாவில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு, இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி இருவரும் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் நாட்டு தம்பதி, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்னுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஜார்க்கண்டில், இந்த கொடூர சம்பவம் நடந்த அடுத்த நாளே, மற்றொரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண். இவர் மேடைக் கலைஞராக இருக்கி்றார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள உசைனாபாத் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அந்த பெண் தனது 3 சக கலைஞர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த இளம்பெண்ணுக்கு, சக கலைஞர்கள் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். அந்த குளிர்பானத்தை குடித்த அந்த இளம்பெண், மயங்கி விட்டார். இதன் பின்னர், சக கலைஞர்கள் 3 பேரும் காரில் அந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், சுயநினைவின்றி இருந்த அந்த இளம்பெண்ணை சாலையோரம் போட்டு விட்டு, அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வண்ட காவல்துறையினர், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள மூன்றாவது குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், அடுத்தடுத்த தினங்களில் 2 கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்