Skip to main content

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்...

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Congress Working Committee resolution to elect its president

 

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமை தேர்வு எப்போது நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொளிக்காட்சி வாயிலாக இன்று (22.01.2021) நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் விவசாயச் சட்டங்கள் உள்ளிட்ட பாஜகவின் ஆட்சி, பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். ஆனால், போராட்டம் குறித்து எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் அகங்காரத்துடன் நடந்துகொள்ளும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

 

வேளாண் சட்டங்கள் வெறுப்புடனும், அவசர அவசரமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா குறித்து விவாதிக்கவும், அதன் தாக்கங்கள், பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கவும், பேசவும், உள்நோக்கத்துடன் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

 

வேளாண் சட்டங்கள் குறித்துத் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து வருகிறது. வேளாண் சட்டங்கள் உணவுப் பாதுகாப்பை அழித்துவிடும், குறைந்தபட்ச ஆதார விலை, பொதுக்கொள்முதல், ரேஷன் முறை ஆகிய 3 தூண்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும் என்பதால், நாம் தொடக்கத்தில் இருந்தே புறக்கணித்தோம்.

 

வாட்ஸப்பில் அர்னாப் கோஸ்வாமிக்கும், பார்க் முன்னாள் தலைவருக்குமான உரையாடல் குறித்து சமீபத்தில் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தேன். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நாட்டின் தேசப் பாதுகாப்பு எவ்வாறெல்லாம் சமரசம் செய்யப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியது. இந்த விவகாரம் வெளியான பின்பும், மத்திய அரசு தனக்கு ஏதும் தெரியாததுபோல் அமைதியாக இருந்து வருகிறது. மற்றவர்களின் தேச பக்திக்கும், தேசியவாதத்துக்கும் சான்று அளித்தவர்கள் தற்போது மக்கள் முன் கையும் களவுமாக மாட்டியிருக்கிறார்கள். 

 

பொதுச் செலவினங்களைக் கவனமாக முன்னுரிமை அளித்துச் செலவிட வேண்டிய சூழல் இருக்கும்போது, மத்திய அரசு தன்னுடைய பெருமையையும், தோற்றத்தையும் உயர்த்தும் வகையான திட்டங்களுக்கு மிகப்பெரிய அளவில் செலவிடுவது வேதனையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார். 

 

இதனையடுத்து, இந்தக் கூட்டத்தில் நடந்தவை குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.