Skip to main content

மம்தாவுக்கு எதிராக களமிறங்கும் காங்கிரஸ்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் சுவேந்த் அதிகாரி மம்தாவை தோல்வியடையச் செய்தார். இருப்பினும், அம்மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

 

இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர், பபானிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இதில் பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பபானிபூர் தொகுதியிலிருந்து மம்தா ஏற்கனவே இரண்டு முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் அவர் வெல்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மம்தா பானர்ஜி, நாளைமுதல் (08.09.2021) பபானிபூர் தொகுதியில் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், மம்தாவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தங்களோடு கூட்டணியில் உள்ள இடது முன்னணியோடு ஆலோசித்து வேட்பாளரை அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

தேசிய அளவில், மம்தா பானர்ஜி காங்கிரஸோடு இணைந்து பாஜகவிற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்கும் நிலையில், மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவது தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது.

 

பபானிபூர் உள்ளிட்ட தொகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 3ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்