Skip to main content

நம்பிச் சென்ற காவலரை திருட்டு காரிலேயே கடத்திய திருடன்!  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

chhattisgarh Traffic police virendra singh kidnaped case
                                                           மாதிரி படம் 

 

'ஆர்.சி. புக் இருக்கா' எனக் கேட்ட டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்ட 29 வயது இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

சட்டிஸ்கர் மாநிலம் சுராஜ்பூரில், ட்ராஃபிக் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருபவர் 39 வயதான விரேந்திர சிங். கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.10.2021) அன்று காலை 9.30 மணியளவில் தேடப்படும் குற்றவாளி ஒருவன், திருட்டு வாகனம் ஒன்றில் வருவதாகவும், அவனை உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் சுராஜ்பூர் டிராஃபிக் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, சுராஜ்பூர் நகரைச் சுற்றிலும் உள்ள வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ட்ராஃபிக் கான்ஸ்டபிள் விரேந்திர சிங்கும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான மாருதி ஸ்விஃப்ட் டிசைர் கார் ஒன்று நின்றிருந்ததைக் கண்ட அவர், அதன் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, அந்தக் கார் டிரைவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதனால், சந்தேகம் அதிகமான கான்ஸ்டபிள் விரேந்திர சிங், அந்த டிரைவரிடம், வண்டியின் ஆர்.சி. புக் எங்கே எனக் கேட்டார். அதற்கு அந்த டிரைவரோ டேஷ்போர்ட், சீட்டுக்கு அடியில் என கார் முழுதும் எங்கெங்கோ தேடிப் பார்க்கிறார். பிறகு, “சார்.. ஆர்.சி. புக் என்னோட ஃபோனுல இருக்குது. உள்ளே வந்து நீங்களே பாருங்க. காருக்குள்ள வந்து உக்காருங்க” எனக் கூறுகிறார். ஆர்.சி. புக்கதான் காட்டப் போகிறார் என நம்பி உள்ளே சென்ற கான்ஸ்டபிள் விரேந்திர சிங்குக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கான்ஸ்டபிள் உள்ளே சென்ற அடுத்த நொடியே அந்த மர்ம நபர் காரின் கதவைப் படாரென சாத்திவிட்டு புகையாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 

இதைச் சற்றும் எதிர்பாராத கான்ஸ்டபிள் விரேந்திர சிங், தன்னை இறக்கிவிடுமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துள்ளார். ஆனால், அந்த மர்ம நபர் அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அதற்குள் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தைக் கார் கடந்து சென்றுவிட்டது. இதனால், பதற்றமடைந்த விரேந்திர சிங், கொஞ்சம் நிதானித்து, அம்மாநில அவசர உதவி எண்ணான 112க்கு அழைத்து நிலைமையை அவசர கதியில் விளக்கியுள்ளார். போலீசே போலீஸுக்கு ஃபோன் செய்து காப்பாற்றும்படி கூறுவதை எந்த சலனமும் இல்லாமல் பார்த்துள்ளார் அந்த மர்ம நபர். பிறகு, ஒரு நொடி கூட தாமதிக்காமல், அருகில் இருந்த அஜாய்பூர் போலீஸ் சோதனைச் சாவடி அருகே கார் வந்தபோது, காரின் கதவை திறந்து கான்ஸ்டபிளைக் கீழே தள்ளிவிட்டு, காரோடு தப்பிச் சென்றிருக்கிறார் அந்த மர்ம நபர்.

 

இதையடுத்து, கான்ஸ்டபிள் விரேந்திர சிங்கை மீட்ட சக போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், அந்த மர்ம நபரை தீவிரமாக தேடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கடத்தல் சம்பவம் நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை மாலையில் அந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், "கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகருக்கு உட்பட்ட கோடி பச்செடா கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான சச்சின் ராவெல் என்பது தெரியவந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காரை, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் ட்ரைவின்போது திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு, அவனிடம் இருந்த மாருதி ஸ்விஃப்ட் டிசைர் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.