Skip to main content

மின்னணு ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு...!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

ott rules and regulation

 

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதில் ‘சமூக வலைதளங்களில், தேசவிரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் இருப்பதாக அதிகாரிகள் கருதும் பதிவுகளை யார் முதலில் உருவாக்கியது என்பதைக் கண்டறியும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

 

அத்தகைய பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும். புகார்களை விசாரிக்க ஒரு தலைமை அதிகாரி உட்பட 3 அதிகாரிகளை சமூக வலைதளங்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும். புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீக்கப்பட்ட பதிவுகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்வகிக்கும்.’ 

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஓ.டி.டி. தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்குக் கடிவாளம் போடும் வகையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது: “ஓ.டி.டி. தளங்கள், மின்னணு ஊடகங்கள், அவற்றில் செய்தி வெளியிடுபவர்கள் ஆகியோருக்கும் நடத்தை நெறிமுறைகள் பொருந்தும். ஓ.டி.டி. தளங்கள், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை யார் யார் பார்க்கலாம் என்பதற்கு, வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும்.

 

ott rules and regulation

 

யு பிரிவு (அனைவரும் பார்க்கலாம்), யு/ஏ 7+ (பெற்றோர் வழிகாட்டுதலுடன் 7 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம்), யு/ஏ 13+, யு/ஏ 16+, ஏ (வயது வந்தோர் மட்டும்) ஆகிய 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும். யு/ஏ 13+ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளைப் பெற்றோர் முடக்கி வைக்கும் வசதி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், அது எதைப் பற்றியது, எந்த வயதினர் பார்க்கலாம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதன்மூலம் அதைப் பார்க்கலாமா, வேண்டாமா என்பதைப் பொதுமக்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

 

அதேபோல், மின்னணு ஊடகங்களில் செய்தி வெளியிடுபவர்கள், இந்திய பத்திரிக்கை கவுன்சிலின் பத்திரிக்கையாளர்களுக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கேபிள் டி.வி.நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தையும் பின்பற்ற வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.