இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்குத் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பிப்ரவரி 13 முதல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், இந்தியா முழுவதுமுள்ள மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர்களுடன், காணொலி வாயிலாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் நிலையையும் அதன் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியின் வேகத்தை அதிகரிக்குமாறு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.