![Bus overturns in valley in jammu](http://image.nakkheeran.in/cdn/farfuture/gkcvprhB6jGSf48VtSkHWTo7IFHwJbBLcoiL_BrzOkg/1717072935/sites/default/files/inline-images/accjamni.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் இருந்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணித்து வந்தனர்.
இந்த நிலையில், அந்தப் பேருந்து ஜம்முவின் அக்னூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தீடீரென்று அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தானது. இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அங்குள்ளவர்கள் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர், இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த 21 பேரை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.