Skip to main content

“வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிஜ்பூஷண் பாலியல் தொல்லை...” - டெல்லி போலீஸ்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Brijbhushan Singh misbehaved with the wrestlers whenever he got a chance

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராகச் செயல்பட்டு வந்த பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

 

இதையடுத்து எம்.பி.பிரிஜ்பூஷண் சிங்கை எம்.பி பதவியில் இருந்து நீக்கி உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். 

 

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 15 ஆம் தேதி பிரிஜ்பூஷண் சிங் மீது டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்ந்தனர். இன்று, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர், “எம்.பி. பிரிஜ்பூஷண் சரண்சிங் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்” என்றார்.

 

தஜிகிஸ்தானில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு வாதிட்ட போலீஸ் தரப்பு வழக்கறிஞர், தஜிகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரிஜ்பூஷண் சரண்சிங் ஒரு மல்யுத்த வீராங்கனையை அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்துகொண்டிருக்கிறார். பிறகு தந்தை போல் பழகினேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அங்கு நடைபெற்ற வேறொரு நிகழ்ச்சியின்போதும் மற்றொரு வீராங்கனையிடமும் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்” என்றார். இதனைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சிங் எனது குடும்பத்தை குறி வைக்கிறார்” - சாக்‌ஷி மாலிக் பரபரப்பு புகார்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Sakshi Malik sensational complaint on Brij bhushan Singh is targeting my family

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

கடந்த கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளைத் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டுச் சென்றார். 

இதற்கிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் - வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சாக்‌ஷி மாலிக், “எங்களுக்கு சஞ்சய் சிங் மட்டும் தான் பிரச்சனை. அவரைத் தவிர புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளில் சஞ்சய் சிங் தலையிடாதவாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உறுதி செய்ய வேண்டும். பா.ஜ.க. எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் எனது குடும்பத்தை குறிவைக்கிறார். அவரால் எனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று கூறினார். 
 

Next Story

“இதுபோன்ற கொடுமைகளில் பிரதமருக்கும் பங்கிருப்பது வேதனையளிக்கிறது” - ராகுல் காந்தி

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
 Rahul Gandhi says It is painful that the Prime Minister is also involved in such atrocities

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக கடந்த 22 ஆம் தேதி (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

கடந்த 26.12.2023 இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளைத் திரும்ப அளிக்க பிரதமர் அலுவலகத்தை நோக்கி நேற்று சென்றார். ஆனால், அவர் வழியிலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டார். இதனால் அவர், தனது இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டுச் சென்றார். பிறகு அதனை டெல்லி போலீஸார் எடுத்துச் சென்றனர். 

இந்த நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது விருதுகளை சாலை நடுவே வைத்திருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்த நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை என்பதே முதன்மையானது. பதக்கங்களும், மற்ற பெருமைகளும் அதற்குப் பிறகுதான். இந்த துணிச்சலான வீராங்கனைகளின் கண்ணீரை விட உங்களது ‘பாகுபலி’யால் கிடைக்கும் அரசியல் பலன்கள் முக்கியமானதா? பிரதமர் தான் இந்தியாவின் காப்பாளர். இத்தகைய கொடுமையில் அவருக்கும் பங்கிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.