Boyfriend hacks girlfriend with axe because she didn't give him cell phone call details in uttar pradesh

Advertisment

செல்போன் அழைப்பு விவரங்களை தராதததால், காதலியை கோடாரியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், முசாபர்பூர் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர், தனது காதலனால் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த போலீசார், படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பணிபுரியும் அந்த பெண், முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். தனது காதலிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாக அந்த நபருக்கு சந்தேகம் எழுந்தது. அதனால், சம்பவ தினத்தன்று இளம்பெண் பணிபுரியும் தொலைத்தொடர்பு அலுவலகத்துக்கு காதலன் வந்துள்ளார்.

Advertisment

தனது சந்தேகத்திற்கு தீர்வு காண, தனது காதலியின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், இளம்பெண்ணை கோடாரியால் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் அந்த பெண் படுகாயமடைந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை கோடாரியால் வெட்டிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.