![Black balloon for Amit Shah in Telangana](http://image.nakkheeran.in/cdn/farfuture/F3nMS9IX7T__GmMfLWs-pPoOpEGwTPiHorQYezZqBkE/1696990361/sites/default/files/inline-images/a1817.jpg)
ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை தொடங்க தற்போது தெலங்கானாவிற்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தெலங்கானாவிற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரை, கருப்பு பலூன் காட்டி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் பகுதியில், பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் வந்திருந்தார். அப்போது சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஊழியர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு பதாகைகளை காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். சிமெண்ட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். போலீசார் அவர்களை அகற்ற முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.