Skip to main content

இந்தியா கூட்டணி எடுத்த முடிவு! பத்திரிகையாளர்களுக்கு கோரிக்கை வைத்த பாஜக

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

BJP made a request to journalists for The decision made by India's alliance

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. ஆனால் ‘இந்தியா’ கூட்டணியைப் பிரதமர் மோடியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 

இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு, உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு போபாலில் அக்டோபர் முதல் வாரத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கே.சி. வேணுகோபால் தெரிவித்திருந்தார். இந்த முதல் பொதுக்கூட்டமானது விலைவாசி உயர்வு; பாஜக ஆட்சியின் ஊழல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

போபால் மட்டுமல்லாது நாக்பூர், கவுகாத்தி, சென்னை, டெல்லி, பாட்னாவிலும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர். பாலு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. எந்தெந்த தொகுப்பாளர்களின் நிகழ்ச்சி என்று 14 பேர் கொண்ட விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்கள் பா.ஜ.க சார்பு நிலையில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது. அதே போல், ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்துக்கு சில தொலைக்காட்சி ஊடகங்கள் போதுமான முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தங்களது செய்தி தொடர்பாளர்களை அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மீடியா சேனல்கள் மற்றும் எடிட்டர்கள் காங்கிரஸ் பிரதிநிதியாக யாரையும் அழைக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்தீப் சுர்ஜேவாலா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

இந்த நிலையில்,  செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம், இந்தியா கூட்டணி எடுத்த முடிவு வேதனையும், கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “ இந்தியா கூட்டணி எடுத்த முடிவு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை எடுத்து காட்டுகிறது. இந்தியாவில் உள்ள சில முக்கிய தொலைக்காட்சி செய்தி பிரமுகர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது. இது சகிப்பின்மையைக் குறிக்கிறது மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கிறது. சில ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களை புறக்கணிக்கும் முடிவை திறம்பப் பெற வேண்டும் என்று சங்கம் எதிர்க்கட்சி கூட்டணியை வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.

 

அதே போல், பா.ஜ.க தரப்பில் இந்தியா கூட்டணி எடுத்த முடிவுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா கூட்டணி சில ஊடகவியலாளர்களைப் புறக்கணிப்பது மற்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இத்தகைய முடிவுகளை எடுத்ததன் மூலம் தனது அடக்குமுறை, சர்வாதிகார மற்றும் எதிர்மறையான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய இழிவான மனநிலையை பா.ஜ.க கடுமையாக எதிர்க்கிறது. எமர்ஜெஸியின் போது ஊடகங்களை எப்படி வாய் அடைத்தன என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.  இன்றும் இந்தியா கூட்டணி, அதே போல் எமர்ஜென்ஸி மற்றும் ஊடகங்களுக்கு எதிராக பழிவாங்கும் மனநிலையுடன் செயல்படுகிறது என்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். 

 

இந்தியா கூட்டணிக்கு உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதை இது காட்டுகிறது. நாட்டில் ஜனநாயகம் உள்ளது. அதனால், ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை நசுக்கவோ அல்லது குறைக்கவோ எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தியா கூட்டணியின் இத்தகைய சர்வாதிகார போக்கை எதிர்த்து, நமது ஜனநாயக அமைப்பில் வலுவாக வகுக்கப்பட்ட இந்திய நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை பின்பற்றி தங்கள் கடமைகளை ஆற்ற அனைத்து பத்திரிக்கையாளர்களையும் பா.ஜ.க கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்