![nitish - tejaswi](http://image.nakkheeran.in/cdn/farfuture/cxZbk-BTwMDiXjg1v5eRvhxh0St3MqrR-9UDhfk1JUs/1629550891/sites/default/files/inline-images/defd.jpg)
இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் மத்திய அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தது.
இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் அடங்கும். இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார் சாதிவாரி இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக அனைத்து கட்சி குழுவோடு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
இதன்தொடர்ச்சியாக நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23), அனைத்து கட்சி குழுவுடன் பிரதமரை சந்திக்க நிதிஷ்குமாருக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் உட்பட 10 பீகார் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
பிரதமரை சந்திக்கவுள்ள அனைத்து கட்சி குழுவில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பாக எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் பங்கேற்க இருக்கிறார். இதனை தேஜஸ்வி யாதவின் அரசியல் ஆலோசகர் சஞ்சய் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.