பெங்களூருவில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபரான தாரிக் உசேன், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக காவல் ஆணையருக்கு ராணுவத்தினர் தகவல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து, பாதுகாப்புப்படையினரும் தாரிக் உசேனைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தையுடன் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. அவரின் கைதை அறிந்து உள்ளூர் மக்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.