Skip to main content

குடும்பத்திற்கே ஃபேமிலி பேக் ஐஸ்கிரீமில் விஷம் வைத்த அத்தை; சிறுவன் உயிரிழப்பால் வெளிவந்த அதிர்ச்சி

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

The aunt who poisoned the family's family pack of ice cream; The shock of the boy's death

 

கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது சகோதரன் குடும்பத்திற்கு வாங்கி கொடுத்த ஃபேமிலி பேக் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து வைக்க, அதை சாப்பிட்ட சகோதரனின் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது கொயிலாண்டி பகுதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவருக்கு அகமது ஹசன் என்ற மகன் உள்ளார். ஆறாவது படித்து வந்த அகமது ஹசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் ஃப்ரிட்ஜில் இருந்த ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்து சாப்பிட்டுள்ளான். ஐஸ்கிரீமை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான்.

 

உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உடற்கூராய்வில் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் அமோனியம் சல்பர் என்னும் ரசாயனம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த ஐஸ்கிரீம் குறித்து போலீஸ் விசாரித்தனர். அதை வாங்கி கொடுத்தது முகமது அலியின் சகோதரியான தாஹிரா என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஐஸ்கிரீமில் விஷம் கலந்ததை தாஹிரா ஒப்புக் கொண்டார்.

 

அண்ணன் முகமது அலியின் வீட்டின் அருகிலேயே வசித்து வந்த தாஹிராவிற்கும் சகோதரனின் குடும்பத்தாருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரத்திலிருந்த தாஹிரா எப்படியாவது குடும்பத்தோடு அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலிகளை கொள்ளும் விஷமான எலி பேஸ்ட்டை கலந்துள்ளார். அதனை அகமது ஹசனிடம் கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அதனை சாப்பிட்டு அகமது ஹசன் உயிரிழந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ஐஸ்கிரீம் மற்றும் எலி பேஸ்ட் வாங்கிய கடைகளுக்கு அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 

அண்மையில் கேரளாவில் காதலி ஒருவர் தனது காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதேபோல் பெண் ஒருவர் சகோதரர் குடும்பத்திற்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்து அதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்