assam

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று (27.04.2021) இரவு முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

Advertisment

தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது அசாம் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கிற்கான தேவை வந்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

இன்று இரவிலிருந்து மே 1 ஆம் தேதி வரை இந்த இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்குமென அறிவித்துள்ள அசாம் அரசு, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது. இந்த இரவு நேர ஊடங்கு இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணிவரை அமலில் இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இம்மாத தொடக்கத்தில், "அசாமில் கரோனா இல்லை. முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை. முகக்கவசம் அணிய அவசியம் ஏற்பட்டால் நான் மக்களுக்கு தெரிவிப்பேன்" என கூறி சர்ச்ச்சையில் சிக்கினார். அந்த சர்ச்சைக்கு விளக்கமளித்தபோது, முகக்கவசம் அணிந்தால், அழகு நிலையங்கள் எவ்வாறு செயல்படும்? என கேள்வியெழுப்பி கடும் விமர்சனத்திற்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது.