Skip to main content

அரசின் அதிரடி உத்தரவு; கொத்துக் கொத்தாக கைது செய்யும் போலீஸ்; என்ன நடக்கிறது அசாமில்?

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

assam government taken for child marriage incident 

 

குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அசாம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா கடந்த 23 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார். அப்போது குழந்தை திருமணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், குழந்தை திருமணங்களின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

 

14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க அசாம் அரசு முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் குழந்தை திருமணங்கள் தொடர்பான  4004 வழக்குகள் பதிவு செய்து, 2044 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தை திருமணத்திற்கு உதவியதாக புரோகிதர்கள் மற்றும் காஜிக்கள் என 51 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து அம்மாநில காவல்துறை டிஜிபி கூறுகையில், "அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு மேலும் இந்த நடவடிக்கை தொடரும். குழந்தை திருமணம் போன்ற சமூக விரோத செயலிலிருந்து மாநிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது