Announcement of the venue for the next meeting of the India alliance

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.

Advertisment

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணி, ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 13 பேர் கொண்ட இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் கே.சி. வேணுகோபால், சரத்பவார், ராகவ் சத்தா, அபிஷேக் பானர்ஜி, டி. ராஜா, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உமர் அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் காங்கிரசை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இடம்பெறவில்லை. அதேபோல் இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் யார் என்றும் அறிவிக்கப்படவில்லை.

அதே சமயம் இந்த கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க வேண்டும்; மக்கள் பிரச்சனை, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்; கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாநிலங்களில் தொகுதி பங்கீடு உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் தொகுதிப் பங்கீடு நடத்தி முடிக்க வேண்டும்; அடுத்து வரும் தேர்தல்களையும் இணைந்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் சந்திக்க வேண்டும்; தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்தின் உத்திகள் மூலம் பரப்புரைகளை ஒருங்கிணைக்க வேண்டும்' எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. தெரிவித்துள்ளார்.