Skip to main content

500 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்..! 12 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரைச் சந்தித்த நெகிழ்ச்சி தருணம்!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 40 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக மனித உரிமை அமைப்புகள் புள்ளி விவரங்களை முன்வைக்கின்றன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திரும்பி வந்ததில்லை. அப்படி வரவே மாட்டார் என்று நினைத்திருந்த பெற்றோரை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்து இருக்கிறார் லதா என்கிற 25 வயது இளம்பெண்.

 

andhra girl meets her parents after twelve years

 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குட்லவல்லேரு என்ற கிராமத்தைச் சேர்ந்த, லட்சுமி நாராயணா, சஞ்சம்மா தம்பதிக்கு பிறந்தவர் ஆதிலட்சுமி. இவர் பள்ளிக்கு சரிவர செல்லாததால், தாய் சஞ்சம்மா அடிக்கடி கண்டித்திருக்கிறார். இதில் கடுப்பான ஆதிலட்சுமி, மார்ச்12, 2007-ல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கெங்கோ சுற்றித் திரிந்து ஒரு பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி நின்ற ஆதிலட்சுமியை தனது வீட்டிற்கு கூட்டிச்சென்ற பெண்மணி ஒருவர், வெறும் ரூ.500-க்கு மதுரையைச் சேர்ந்த மதுலிகா என்பவரிடம் விற்பனை செய்துள்ளார்.

ஆதிலட்சுமிக்கு லதா என்று பெயரிட்ட மதுலிகா, அவரை நன்கு கவனித்து தனது சொந்த மகளைப் போலவே வளர்த்துள்ளார். மகள் வளர்ந்ததும் மதுரையில் உணவகம் நடத்திவந்த காஞ்சிவனம் என்பவருக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். தன்னை எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்த மதுலிகாவின் மறைவுக்குப் பிறகு, தனது கணவரிடம் தன்னைப் பெற்றவர்கள் பற்றி எடுத்துச்சொல்ல, தாமதம் செய்யாமல் ஆந்திராவுக்கு கூட்டிச்சென்று விஜயவாடா காவல் ஆணையரிடம் மனு செய்ய வைத்தார்.

இதனடிப்படையில் செய்திகள் வெளியாக, ஆதிலட்சுமியின் பெற்றோர் அவரைத்தேடி நேரில் வந்தனர். மகள் தொலைந்தபோது கொடுத்த புகார் மனு, குடும்ப புகைப்படங்கள், செய்தித் தகவல்கள் என அனைத்தையும் அவர்கள் கொண்டு வந்தபிறகே, ஆதிலட்சுமியை சந்திக்க அனுமதித்துள்ளனர். ஒரு சிறிய தவறால் 12 ஆண்டுகளாக பிரிந்திருந்த பெற்றோரும், மகளும் சந்தித்து கண்ணீரின் மூலம் அன்பைப் பகிர்ந்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.