Skip to main content

மாநிலங்களவையிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

agriculture bills passed in rajyasabha

எதிர்க்கட்சிகளும் கடும் அமளிக்கிடையே வேளாண் தொடர்பான இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேறியது.

 

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், இன்று (20/09/2020) காலை வேளாண் தொடர்பான இரு மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது.

 

இதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை துணை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு மைக்கை உடைத்தெறிய முயற்சி செய்தனர். மேலும் அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து எறிந்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

 

அதைத்தொடர்ந்து அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், எதிர்க்கட்சிக்களின் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் தொடர்பான இரு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

 

விவசாய உற்பத்திப் பொருட்களின் விற்பனை தொடர்பான ஒப்பந்த மசோதா முதலில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து விவசாயப் பொருட்களின் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த மசோதா பின்னர் நிறைவேற்றப்பட்டது.

 

ஏற்கனவே மக்களவையில் வேளாண் தொடர்பான இரு மசோதாக்களும் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து, குடியரத்தலைவர் ஒப்புதல் அளித்த பின் சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வேளாண் மசோதாக்கள் மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்த திருத்தங்கள் தோற்கடிக்கப்பட்டன.

 

மசோதாக்கள் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவை நாளை (21/09/2020) காலை 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.