Skip to main content

யூட்யூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

17 year old girl self delivered a baby by watching youtube videos

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மதிக்கத்தக்க மாணவி. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவரின் தாய், கண் பார்வை குறைபாடு கொண்டவர். இவரது தந்தை, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே இருக்கும் ஊரில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில், அம்மாணவி வீட்டிலேயே யார் உதவியுமின்றி, பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவர் குழந்தை பெற்றெடுத்து மூன்று நாட்கள் கழித்தே அவரது பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்துள்ளது.

 

வீட்டிலேயே தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்டதால் அம்மாணவிக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் வயது 17 என்பதால், மருத்துவமனை மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இவர்களின் வீட்டருகே 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்துவருகிறார். அவருடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டு, காதலாகியுள்ளது என்றும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையிலும் இருந்துள்ளனர். அதன் மூலம் அம்மாணவி கருத்தறித்துள்ளார்.

 

17 year old girl self delivered a baby by watching youtube videos
                                 மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

 

இதனை பெற்றோரிடம் அவர் கூறாமல் மறைத்துள்ளார். கடந்த 20ஆம் தேதி மாணவிக்குப் பிரசவ வலி வந்துள்ளது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாணவி அவர் வீட்டின் மேல் உள்ள அறைக்குச் சென்றுள்ளார். பிறகு பிரசவம் குறித்து யூட்யூபில் பார்த்துள்ளார். அதனடிப்படையில் அவர், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையைப் பெற்றெடுத்து, தொப்புள் கொடியையும் அறுத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவர் எந்த வெளியாட்களின் உதவியையும் பெறவில்லை என்றும், பிரசவம் முழுவதையும் தனக்குத் தானே மேற்கொண்டார் என்றும் தெரியவந்துள்ளது. பிரசவம் முடிந்த பின்பு வீட்டில் வழக்கம்போல் அவர் இருந்துள்ளார். அதேசமயம் அவர் அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதையும் பெற்றோர்கள் கவனித்துள்ளனர்.

 

ஆனால், கரோனா காலம் என்பதால் ஆன்லைன் வகுப்புகள் இருக்குமென அவர்களும் அதனைப் பெரிதாக கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்நிலையில், அக் 22ஆம் தேதி வீட்டின் மேல் அறையிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. எப்படி வீட்டிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்கிறது என அவரது பெற்றோர்கள் மேலே சென்று பார்த்தபோதுதான், இச்சம்பவம் தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தங்கள் மகளிடம் விசாரித்தபோது அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டுமின்றி அவருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதும் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அவரது பெற்றோர், அவரை மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் மாணவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், 17 வயது மாணவியைத் தாயாக்கிய அவ்வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.