பர

பீகாரில் வங்கிக் கணக்கே இல்லாத ஒருவரின் பெயரில் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பு பீகாரின் ககாரியா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் 5 லட்சம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டது.இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், சில நாட்கள் கழித்து அவரிடம் பணம் தொடர்பாக கேட்டபோது தான் அதை செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மோடி தருவதாக கூறிய 15 லட்சம் பணத்தின், முன்பணமாக இதை நான் எடுத்துக்கொண்டேன் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்த அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவே அவர் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களின் வங்கிக் கணக்கில் 960 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில், வங்கிக் கணக்கே இல்லாத கூலித்தொழிலாளியான லிபின் சவுகான் என்பவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக, வங்கிக் கணக்கு தொடங்கமுற்பட்டபோது, உங்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றும், அதில் 9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து உள்ளிட்டவற்றைப் பார்த்துள்ளார். அதில், ஆதார் கார்டு மட்டுமே அவருடையது பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்தும் வேறு ஒருவருடைய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.