Union Cabinet meeting chaired by Prime Minister Modi

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.

அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு சலுகைகள் அளிப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.