sanjsay raut alleged Congress should take blamed if Allies Feel India Bloc Is Disintegrating

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, விசிக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்றது. இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணியைத் தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதிலும், மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, சரத் பவாரின் சரத்சந்திர பவார் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. தற்போது வரை இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு, புதிய தலைமையை ஏற்க மம்தா பானர்ஜிக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனிடையே, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. அதனால் அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என ஆகிய கட்சிகளுடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே, இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக மட்டும் அமைக்கப்பட்டது என்றால் கூட்டணியை கலைத்து விடலாம் ஜம்மு காஷ்மீர் முதல்வரும், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்தார்.

Advertisment

sanjsay raut alleged Congress should take blamed if Allies Feel India Bloc Is Disintegrating

இந்த நிலையில், பிளவுப்படுவதாக இந்தியா கூட்டணி கருதினால் காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா அணியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சஞ்சய் ராவத், “இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இருந்தது என்றும், இப்போது அது இல்லை என்றும் கூட்டணிக் கட்சிகள் கருதினால், காங்கிரஸைக் குற்றம் சொல்ல வேண்டும். கூட்டணியில் எந்தவிதமான தகவலும், உரையாடலும் இல்லை. அதாவது கூட்டணிக்குள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்ற குழப்பம் அனைவர் மனதிலும் உள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஒன்றாக போராடி நல்ல பலன்களைப் பெற்றோம். எதிர்காலத் திட்டங்களைத் தீர்மானிக்க ஒரு கூட்டம் இந்தியா கூட்டணியில் இருந்திருக்க வேண்டும். இது சம்பந்தமாக முன்முயற்சி எடுப்பது காங்கிரஸின் பொறுப்பாகும். மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி வைத்திருந்தால், இனி இந்தியா கூட்டணி இல்லை என்று அறிவிக்கவும். அப்படி செய்தால், அனைத்து கூட்டணி கட்சிகளும் தங்கள் சொந்த பாதையை தேர்வு செய்ய சுதந்திரமாக இருக்கும். மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், அனைவரையும் ஒன்றாக வைத்திருக்க காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும். கடந்த கால தவறுகளை சரி செய்ய வேண்டும். எதிர்க்கட்சி குழுவை கலைப்பது ஒரு தீவிர நடவடிக்கையாக இருக்கும்” என்று கூறினார்