Skip to main content

பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Periyar University Order to dismiss the registrar

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியராக பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம்கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணைவேந்தராக பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்கு தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்மேம்பாட்டு பாட திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கை குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் பதிவாளர் தங்கவேல் ஈடுபட்டது நிரூபனமானது.

இந்நிலையில் பெரியார் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமை செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செய்லாளர் கார்த்திக் பிறப்பித்துள்ளார். பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்