Skip to main content

“எல்லோரும் திருட்டுப்பயலுகன்னு கீ போர்டுல கதகளி ஆடுற...” கமல் வெளியிட்ட வீடியோ

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
Kamal Haasan Voter ID card awareness video

 

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அது பற்றிய முகாம்களில் மக்கள் பங்கேற்று தங்கள் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென வீடியோ பதிவு வெளியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

அந்த வீடியோவில், ''18 வயதை பூர்த்தி செய்த ஒரு இந்திய இளைஞனுக்கு மிகப் பெரிய கௌரவம் வாக்காளர் என்கிற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை. கடமையை சரிவர செய்யாத சமூகம், தன்னுடைய உரிமைகளை தன்னால் இழந்துவிடும். 

 

மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரியில்லை, எல்லோரும் திருட்டுப்பயலுகன்னு கீ போர்டுல கதகளி ஆடுற பல பேருகிட்ட ஓட்டர் ஐ.டி. கூட இல்ல. எந்த விஷயத்த நாம வேண்டாமுன்னு நினைக்கிறோமோ, எந்த விஷயம் நமக்கு சம்மந்தமில்லன்னு நினைக்கிறோமோ, அந்த விஷயத்தாலத்தான் நமக்கு ஆபத்து வந்து சேரும். இது எல்லாத்துக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பரிகாரம் அறிவித்திருக்கிறது. 

 

நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகள் அல்லது டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகள் உங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடக்க இருக்கிற சிறப்பு முகாமுக்கு போங்க, வோட்டர் ஐ.டி. தொடர்பான உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். 

 

சமீபத்தில் பீகார் தேர்தலில் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஒருத்தர் தோற்றுள்ளார். முக்கியமாக இல்லத்தரசிகளின் வாக்குகள் அங்கு வெற்றி, தோல்விகளை நிர்ணயித்துள்ளது. நீங்க ஓட்டுப் போடுறது யாரோ ஒருத்தருக்கு இல்லீங்க. நீங்க ஓட்டு போடுறது உங்களுக்காகத்தான். உங்களுக்காக யாரு முடிவெடுக்கணும் என்கிறத நீங்களே தீர்மானிக்கிறதாலத்தான், உங்கள் ஒட்டு உங்களுக்கேதான். 

 

அதனால 2021 தேர்தலுக்கு நீங்கள் மனசுக்குள்ள சொல்லிக்க வேண்டிய தாரக மந்திரம், I will change, I will vote. மறுபடியும் சொல்றேன். ஆட்சி மாற்றம் என்கிறது வெறும் அரசியல் மாற்றம், அதிகாரம் மாற்றம், நிர்வாக மாற்றம் மட்டுமல்ல. எல்லாரும் முடிவெடுக்கிற அன்னைக்கு கூடினால் அதுவே பெரிய சமூக மாற்றம்'' என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.